ரஞ்சி கோப்பை: 18 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து தடுமாறிய தமிழக அணி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகம்–ஜார்க்கண்ட் அணிகள் மோதும் ஆட்டம் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி 90 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் (125*) மற்றும் சாஹில் ராஜ் (64*) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று (இரண்டாம் நாள்) தொடர்ந்து விளையாடிய ஜார்க்கண்ட் அணி, 132.1 ஓவர்களில் 419 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இஷான் கிஷன் 247 பந்துகளில் 15 பவுண்டரி, 6 சிக்ஸர் அடித்து 173 ரன்களும், சாஹில் ராஜ் 183 பந்துகளில் 77 ரன்களும் எடுத்தனர்.
தமிழக அணிக்காக குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட்கள் பெற்றார்.
பின்னர் பேட்டிங் தொடங்கிய தமிழகம், தொடக்கத்திலேயே கடும் அதிர்ச்சியை சந்தித்தது. முதல் பந்திலேயே பாலசுப்ரமணியன் சச்சின் அவுட் ஆனார். கேப்டன் நாராயண் ஜெகதீசன் (3), பிரதோஷ் ரஞ்ஜன் பால் (9), ஆந்த்ரே சித்தார்த் (2), பாபா இந்திரஜித் (0) ஆகியோரும் விரைவில் வெளியேறினர்.
இதனால் 2-வது நாள் ஆட்ட முடிவில் தமிழகம் 11 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 18 ரன்களில் தடுமாறியது. அம்ப்ரிஷ் (0) மற்றும் ஷாக் கான் (4) களத்தில் இருந்தனர்.
இன்று (3-ம் நாள்) தமிழக அணி இன்னிங்ஸை மீண்டும் தொடங்குகிறது.