கனடா அரசு கொண்டு வந்துள்ள C-3 குடியுரிமை திருத்த மசோதா, அந்நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நன்மை தரக்கூடியதாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம், குடியுரிமை பெறுவது தொடர்பான பல முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
கனடாவின் குடியுரிமைச் சட்டத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய C-3 திருத்தத்தின் மூலம், ‘வம்சாவளி அடிப்படையிலான குடியுரிமை’ விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. கனடாவில் வாழும் இந்திய மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், இந்தச் சட்டம் இந்தியர்களுக்கு நேரடி பலன் அளிக்கும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்னர், கனடா அமைச்சர் லேனா டியாப் இதனை உறுதிப்படுத்தினார். முந்தைய சட்டத்தின் காரணமாக குடியுரிமை இழந்தவர்கள், இப்போது மீண்டும் விண்ணப்பிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
2009 முதல் அமலில் இருந்த ‘முதல் தலைமுறை வரம்பு’ விதி, வெளிநாட்டில் பிறந்த கனடா பெற்றோர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதைத் தடை செய்தது. இதனால் உலகம் முழுவதிலும் உள்ள பல இந்திய குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த கட்டுப்பாடு அரசியலமைப்புக்கு முரணானது என 2023 டிசம்பர் 19ஆம் தேதி ஒன்டாரியோ உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்வதைத் தவிர்த்த கனடா அரசு, திருத்தங்களுடன் C-3 மசோதாவை நிறைவேற்றியது. இதுவரை குழந்தைக்கு கனடா குடியுரிமை கிடைக்க வேண்டும் என்றால் சில பெண்கள் பிரசவத்திற்காக மட்டும் கனடாவுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. புதிய சட்டம் அந்த நிலையை முற்றிலும் மாற்றியுள்ளது.
இப்போது, குழந்தை பிறப்பதற்கு முன் அல்லது தத்தெடுப்பதற்கு முன், பெற்றோர் 1,095 நாட்கள் (சுமார் 3 ஆண்டுகள்) கனடாவில் வாழ்ந்திருந்தால், குழந்தைக்கு குடியுரிமை பெற உரிமை கிடைக்கும். இந்த நடைமுறை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் விதிகளுடன் ஒத்துப்போவதாகவும் கூறப்படுகிறது.
மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இது எப்போது அமலுக்கு வரும் என்பதற்கான அறிவிப்பை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தவுடன், குடியுரிமை விண்ணப்பங்கள் பெருமளவில் அதிகரிக்கும் என சட்ட நிபுணர்கள் கணிக்கின்றனர்.