ஃபாக்ஸ்கான் ரூ.15,000 கோடி முதலீடு உறுதி – சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் 2025–2026 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி (குமாரபாளையம் தொகுதி) பேசியதாவது:
“தமிழகத்தில் பல துறைகளில் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அப்படியிருக்க இரட்டை இலக்க வளர்ச்சி எப்படிச் சாத்தியமாகிறது?
தமிழகத்தைச் சேர்ந்தவர் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (CEO) இருந்தும், அந்த நிறுவனத்தின் புதிய முதலீடு ஆந்திராவுக்கு சென்றுள்ளது. ஏன் தமிழகத்துக்கு கொண்டு வர முடியவில்லை?
மேலும், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ரூ.15,000 கோடி முதலீட்டை உறுதி செய்ததாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், அதனை அந்நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியதாவது:
“தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட அந்நிய முதலீடுகளின் விளைவாக இதுவரை இல்லாத அளவுக்கு 14,000 புதிய பொறியியல் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.
தனியார் நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் உறுதியாக அமலில் உள்ளன. அதேபோல, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ரூ.15,000 கோடி முதலீடும் தமிழகத்துக்கு உறுதியாக வரும்.
அண்டை மாநிலத்துக்கு சென்ற முதலீடுகள் குறித்து குற்றச்சாட்டு கூற விரும்பவில்லை; அதில் உள்ள அரசியல் அனைவருக்கும் தெரிந்ததே. உலகளாவிய அரசியல் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். இதில் அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என முதலவர் மு.க. ஸ்டாலின் நமக்கு அறிவுறுத்தியுள்ளார்,” என கூறினார்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பேசுகையில்,
“முதல்வர் அண்மையில் வெளிநாடு சென்றபின் திரும்பியபோது, இதுவரை 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) மேற்கொள்ளப்பட்டன என்றும், அதன் மூலம் 32 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறினார். 77 சதவீத ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்படியானால் 28 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலளித்ததாவது:
“28 லட்சம் அல்ல, மொத்தம் 32 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்பதையே மத்திய அரசு தரவுகள் உறுதி செய்கின்றன,” எனத் தெரிவித்தார்.