தீபாவளி பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்
சென்னையில் ஜவுளி, பட்டாசு, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அமோகம்
தீபாவளி பண்டிகை இன்று நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து, இனிப்பு வழங்கி, வீடுதோறும் தீபம் ஏற்றி வைத்து மக்கள் பண்டிகையை கொண்டாடினர்.
இதையடுத்து, சென்னையில் ஜவுளி, பட்டாசு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்தது.
கடை வீதிகளில் கூட்ட நெரிசல்
தீபாவளி பண்டிகை என்றாலே, துணிக்கடைகள் அதிகம் உள்ள சென்னையின் முக்கிய கடை வீதிகளில் கூட்ட நெரிசல் இயல்பாகவே அதிகரித்து விடும்.
அந்தவகையில், தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
மழை விட்டு விட்டு பெய்த நிலையிலும், நேற்று விடுமுறை என்பதால் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் ஜவுளி மற்றும் பட்டாசு கடைகளை நோக்கி படையெடுத்தனர்.
சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, சவுக்கார்பேட்டை, பெரம்பூர், பாரிமுனை உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் மக்கள் குடை பிடித்தபடியே ஷாப்பிங் செய்தனர்.
துணிகள், நகைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்துவித பொருட்களும் ஒரே இடத்தில் வாங்க பலரும் தி.நகரிலே குவிந்ததால் அப்பகுதியில் திரும்பிய திசையெல்லாம் மனித தலைகளாகவே காணப்பட்டன.
கடைசி நேர விற்பனை களைகட்டியது
நேற்று கடைசி நேர விற்பனை என்பதால், சிறிய ஜவுளிக்கடைகளில் ஏராளமான புதிய ரக ஆடைகள் விற்று தீர்ந்தன.
தீபாவளி ஆஃபரில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதிலும் மக்கள் ஆர்வம் காட்டினர்.
தீபாவளியை முன்னிட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதால், சென்னையின் பல பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்களின் விற்பனையும் அமோகமாக நடந்தது.
இதுமட்டுமல்லாமல், சாலையோர கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
கம்மல், வளையல், தோடுகள், காலணிகள், பெல்ட்டுகள் விற்பனை ஜோராக நடைபெற்றது.
காவல்துறையினர் தொய்வின்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து நெரிசல்
வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த ஜவுளிக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போரூர், பாடி, குரோம்பேட்டை பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஜவுளிக்கடைகளை தொடர்ந்து, இனிப்பு மற்றும் காரக் கடைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
பட்டாசு கடைகளைப் பொறுத்தவரை, விற்பனை சில பகுதிகளில் ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும் பின்னர் விறுவிறுப்பாக மாறியது.
சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
இதேபோல், பூக்கடைகள், நகைக் கடைகள், ஃபேன்ஸி ஸ்டோர்ஸ், பழக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதனால், சென்னையின் முக்கிய கடைவீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னைவாசிகள் ஊருக்குப் புறப்பட்டனர்
இதனிடையே, சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சிறப்பு பேருந்துகள், ரயில்கள் மற்றும் ஆம்னி பேருந்துகள் மூலமாக சுமார் 8 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
அத்துடன், தனியார் வாகனங்களில் லட்சக்கணக்கானோர் ஊருக்கு சென்றனர்.
இதனால் ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கு தீர்வாக மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் சிவசங்கர் தகவல்
தீபாவளி முடிந்து மீண்டும் மக்கள் சென்னை திரும்பும் போது, உரிய போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தேவைக்கேற்ப பேருந்துகள் தடையின்றி இயக்கப்படும் என்றும், அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.