நெப்போலியன் காலத்து நகைகள் கொள்ளை: பிரான்ஸ் நாட்டின் அருங்காட்சியகம் மூடல்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள இலூவா அருங்காட்சியகம் உலகப் புகழ்பெற்றது. இங்கு மோனாலிசா ஓவியம் உட்பட வரலாற்று சிறப்புமிக்க 33,000 கலைப்பொருட்கள், சிற்பங்கள், நகைகள் மற்றும் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பும் இங்குள்ள விலைமதிப்பற்ற பொருட்கள் திருட்டு மற்றும் கொள்ளை முயற்சிகளுக்கு இலக்காகியுள்ளன.
இந்நிலையில், இந்த அருங்காட்சியகத்தில் நேற்று முன்தினம் ஒரு பெரும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. ஸ்கூட்டரில் வந்த கொள்ளையர்கள், கட்டிட பராமரிப்பு நடைபெற்ற இடத்தின் வழியாக ஊடுருவி அருங்காட்சியகத்துக்குள் நுழைந்துள்ளனர்.
ஹைட்ராலிக் ஏணியை பயன்படுத்தி உள்ளே சென்ற அவர்கள், அப்போலோ வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு மன்னர்கள் மற்றும் ராணிகள் பயன்படுத்திய 9 கிரீடங்கள் மற்றும் நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இவை மன்னர் நெப்போலியன் காலத்து நகைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் டிஸ்க் கட்டர் மூலம் நகைகள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டியை வெட்டி, கிரீடங்கள் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர். முழு சம்பவமும் வெறும் 7 நிமிடங்களில் நடந்ததாக கூறப்படுகிறது. “மிக நுணுக்கமாக திட்டமிட்டு இந்த கொள்ளை நடைபெற்றுள்ளது,” என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் பிரபல அருங்காட்சியகத்தில் நடைபெற்ற இந்த பெரும் கொள்ளை குறித்து, கலாச்சாரத்துறை அமைச்சர் ரச்சிதா ததி நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அருங்காட்சியகத்துக்குத் ஏற்பட்ட சேதம் மதிப்பீடு செய்யப்படுகிறது. கொள்ளை சம்பவத்தையடுத்து இலூவா அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டது, மேலும் அருங்காட்சியகத்தின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. பார்வையாளர்கள் செல்ல அனுமதி நேற்று வழங்கப்படவில்லை.