பூத் மட்டத்திலான மக்கள் தொடர்பை வலுப்படுத்துவதில் காங்கிரஸ் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்து 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, பிற்பகல் 3 மணி நிலவரப்படி 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 தொகுதிகளில், இடதுசாரி கட்சிகள் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. மொத்தமாக கூட்டணி 30 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
மறுபுறம், தேசிய ஜனநாயகக் கூட்டணி 206 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதில் பாஜக 95, ஜேடியு 82, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 20, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 5, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.
இந்த நிலைமை காங்கிரஸுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சி அமைப்பை அடிப்படை மட்டத்தில் வலுப்படுத்த வேண்டும் என்று திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். அதோடு, வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக சந்தேகங்களையும் அவர் முன்வைத்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அவர் கூறியதாவது:
“நான் அஞ்சியதே நடந்துள்ளது. சிறப்பு திருத்த நடவடிக்கையின் போது 62 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன; 20 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். அதில் 5 லட்சம் பேர் எஸ்ஐஆர் படிவத்தை நிரப்பாமல் சேர்க்கப்பட்டவர்கள். நீக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர். EVM தொடர்பான சந்தேகங்கள் நீங்கவில்லை. காங்கிரஸ் தனது அமைப்பை வலுப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இன்றைய தேர்தல்கள் பேரணிகள் அல்லது கூட்டங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை; பூத் அளவிலான மக்கள் தொடர்புதான் வெற்றியை முடிவு செய்கிறது. வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்றும் அவர் கூறியுள்ளார்.