போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ, இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு 8 சிவிங்கிப் புலிகளை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.
3 நாள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நேற்று தலைநகர் கேபரோனிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மோக்கோலோடி தேசியப் பூங்காவுக்குச் சென்றார். அவருடன் போட்ஸ்வானா அதிபரும் இணைந்திருந்தார். பூங்கா முழுவதும் இருவரும் பாதுகாப்பு வாகனத்தில் சுற்றிப் பார்வையிட்டனர்.
அப்போது, இப்பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 8 சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்காக அதிபர் துமா கிடியான் போக்கோ ஒப்படைத்தார். இவை விரைவில் இந்தியா கொண்டு வரப்படவுள்ளன. களஹாரி வனப்பகுதியில் இருந்து இவை மோக்கோலோடி தேசியப் பூங்காவுக்கு மாற்றப்பட்டவை. 3,700 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா, போட்ஸ்வானாவின் முக்கியமான வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.
மோக்கோலோடி பூங்காவில் காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி, பல்வேறு ஆப்பிரிக்க பறவைகள் மற்றும் ஊர்வனங்கள் உள்ளிட்ட பல விலங்குகள் வாழ்கின்றன. அடுத்த சில வாரங்களில் இந்த சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று குடியரசுத் தலைவர் மாளிகை தரப்புகள் தெரிவித்தன.
இதற்கு முன், 2022-ஆம் ஆண்டு நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகளும், தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிப் புலிகளும் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டன என்பது நினைவுறத்தக்கது.