டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின், காஷ்மீரில் 13 இடங்களில் தேசிய உளவுப்பிரிவு மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து சோதனைகள் நடத்தினர்.
கடந்த நவம்பர் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். முதலில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், பின் விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.
NIA டைரக்டர் ஜெனரல் விஜய் சகாரே தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதல் குறித்து மத்திய அமைச்சரவை கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இது தீவிரவாதச் சம்பவம் என அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு ஜெய்ஷ்-இ-முகமது இதில் தொடர்புடையது என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை “ஒயிட் காலர் தீவிரவாதம்” என குறிப்பிடப்படுவதற்கான காரணம் — தாக்குதலில் மருத்துவர்கள், உயர் கல்வியாளர்கள், சமூக ரீதியாக நன்கு நிலைநிறுத்தப்பட்டவர்கள் ஈடுபட்டிருப்பதுதான்.
குண்டுவெடிப்பை நடத்திய டாக்டர் உமர் முகமது நபி, ஹரியானாவின் அல் ஃபலா மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். வெடிப்பில் உயிரிழந்தவர் அவர்தான் என டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
அவரின் நெருங்கிய நண்பர்கள் முஜம்மில் ஷகில் மற்றும் அதில் அகமது ராதர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் பேரில் மேலும் பலரை தேடி வருகின்றனர்.
பாதுகாப்பு படையினர் கைப்பற்றிய டைரிகளில், நவம்பர் 8 முதல் 12க்குள் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாகவும், 25 நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. டைரிகளில் உள்ள குறியீட்டு வார்த்தைகள் தற்போது நுண்ணாய்வு ஆய்வில் உள்ளன.
மேலும், டெல்லி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் i20 காருடன், EcoSport வாகனமும் பயன்படுத்தப்பட்டதாகவும், இன்னும் இரண்டு கார்களை வெடிகுண்டு வாகனங்களாக மாற்ற திட்டமிட்டிருந்தது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.