திருச்செந்தூரில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
“திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூர சம்ஹாரம் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும். இந்த திருவிழாவிற்கு 10 லட்சம் பக்தர்கள் வரை வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
நகரத்தின் சுத்தம் பராமரிக்க குப்பைகள் அவ்வப்போது அகற்றப்பட வேண்டும்.
கோயில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்கள் மற்றும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாடுகளை வெளியில் விடாமல் இருக்க உரிமையாளர்களிடம் எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூருக்கு மொத்தம் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதில் நெல்லையிலிருந்து 60, தூத்துக்குடியிலிருந்து 40, மதுரையிலிருந்து 60, ராஜபாளையத்திலிருந்து 15 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் திருச்செந்தூர் ஐ.டி.ஐ. வளாகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளிலிருந்தும் தனித்தனி தற்காலிக நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
பக்தர்கள் பாதுகாப்புக்காக சுமார் 4,000 போலீஸார் பணியில் ஈடுபடவுள்ளனர். கடலோரப் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக 5 படகுகளில் போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் பணியாற்றுவார்கள்.
செல்போன் இணைப்பு தடைபடாமல் இருப்பதற்காக 6 நிலையான கோபுரங்களுடன் மேலும் 2 நகரும் கோபுரங்கள் கோயில் வளாகத்தில் அமைக்கப்படுகின்றன.
பக்தர்களுக்கு ஓஆர்எஸ் கரைசல் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் வழங்கப்படும். 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கும். அவசர மருத்துவ உதவிக்கு காவல் துறையினர் உடனடி ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
தீயணைப்புத் துறை சார்பில் 7 தீயணைப்பு வாகனங்களும் 40 கமாண்டோ வீரர்களும் தயார் நிலையில் இருப்பார்கள். கோயில் பாதுகாப்பு பணிக்காக 144 தனியார் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்; விழாவின் முதல் மூன்று நாட்களுக்கு கூடுதலாக 50 பேரும், அடுத்த மூன்று நாட்களுக்கு 100 பேரும் இணைக்கப்படவுள்ளனர்.
விழா காலத்தில் அனைத்து தெரு விளக்குகளும் சரியாக இயங்குமாறு உறுதி செய்ய வேண்டும். கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கவுதம், கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.