பெங்களூரு மத்திய சிறையில் சொகுசு வாழ்க்கை: கொலை, பலாத்கார, தீவிரவாத கைதிகள் மீது அதிர்ச்சி வீடியோ!
பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலை, பலாத்கார மற்றும் தீவிரவாத குற்றவாளிகள் சொகுசாக வாழ்வது குறித்து வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை 1997ஆம் ஆண்டு 138 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இதில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா தண்டனை அனுபவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது சசிகலா டிவி, தனி சமையலறை உள்ளிட்ட வசதிகளுடன் வசிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
சமீபத்தில், கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன், தனது நண்பர்களுடன் செல்போனில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சை கிளப்பியது. அதேபோல் சில பிரபல ரவுடிகள் சிறைக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் காட்சிகள்வும் வெளியானது.
தற்போது, உமேஷ் ரெட்டி என்ற கொலை தண்டனை கைதி, இரண்டு செல்போன்களை கையில் பிடித்து பேசுவது போன்ற புதிய வீடியோ வெளிவந்துள்ளது. இவர் 1997 முதல் 2022 வரை 20 பெண்களை பலாத்காரம் செய்து, 18 பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சில வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், 19 கிலோ தங்க கடத்தல் வழக்கில் கைதான தருண் ராஜ், சிறை அறையில் சோஃபாவில் அமர்ந்து டிவி பார்ப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதேபோல், ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக கைதான ஜுஹாப் ஹமீத் ஷக்கீல் செல்போனில் பேசுவது போன்ற வீடியோவும் வெளிவந்துள்ளது.
இதேபோன்று பல கைதிகள் செல்போனில் பேசுவது, சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக சிறைத்துறை டிஜிபி தயானந்தா கூறியதாவது:
“சிறையில் நடப்பதை பற்றி முழுமையாக விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது,” என்றார்.