மயிலாடுதுறை மாயூரநாதர், வதானேஸ்வரர் கோயில்களில் துலா உற்சவ கொடியேற்றம்
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரி கரையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா உற்சவம் மிகுந்த பக்தி உற்சாகத்துடன் தொடங்கியது.
மாதம் முழுவதும் தினமும் சிவன் கோயில்களிலிருந்து சுவாமிகள் புறப்பாடு செய்து, துலாக்கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுவது மரபாகும். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில் நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி விழாவை முன்னிட்டு, நேற்று மயிலாடுதுறை கோயில்களில் துலா உற்சவத் திருக்கொடியேற்றம் நடைபெற்றது.
மாயூரநாதர் கோயிலில், ரிஷப கொடி கோயிலின் நான்கு வீதிகளையும் வலம் வந்து, கோயில் கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டது. அபயாம்பிகை சமேத மாயூரநாதர் பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளிய பின், திருவாவடுதுறை ஆதீன கட்டளை சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடிமரத்தில் கொடி ஏற்றி, மகா தீபாராதனை காணப்பட்டது.
தொடர்ந்து கோயிலின் நான்கு பிரகாரங்களிலும் கொடியேற்றம் நடந்தது. இதில் கோயில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி உள்ளிட்ட பல பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல், வதானேஸ்வரர் கோயிலில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் துலா உற்சவ கொடியேற்றம் நடைபெற்றது. மேலும், தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் மற்றும் மார்க்கெட் காசி விஸ்வநாதர் கோயில்களிலும் துலா உற்சவ கொடியேற்றம் சிறப்பாக நடந்தது.