பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் — மதியம் 1 மணி வரை 42.31% வாக்குகள் பதிவு
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 6) காலை 7 மணிக்கு 18 மாவட்டங்களில் தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
மதியம் 1 மணி நிலவரப்படி, மொத்தமாக 42.31% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 9 மணிக்குள் 13.13%, 11 மணிக்குள் 27.65% வாக்குகள் பதிவாகியிருந்தன.
மாவட்ட வாரியாக பார்க்கும்போது,
- கோபால்கஞ்ச் – 46.73%,
- லக்கிசராய் – 46.37%,
- பெகுசராய் – 46.02%,
- மாதேபுரா – 44.16%,
- சஹார்சா – 44.20%,
- முசாபர்பூர் – 45.41% என உயர்ந்த வாக்குப் பதிவு பதிவாகியுள்ளது.
தலைநகர் பாட்னாவில் 37.72% வாக்குகள் பதிவாகியுள்ளன.
விவிஐபி தொகுதிகளில்,
- ரகோபூர் – 43.30%,
- மஹூவா – 40.41%,
- தாராபூர் – 44.35%,
- பன்கிபூர் – 25%,
- மொகாமா – 41.78% என வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது.
இந்தத் தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா, மேலும் பாஜக மற்றும் ஜேடியு சார்ந்த பல அமைச்சர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும், இளம் பாடகி மைதிலி தாக்கூர் (பாஜக – அலிகஞ்ச்), போஜ்புரி நடிகர்கள் கேசரி லால் யாதவ் (ஆர்ஜேடி – சாப்ரா) மற்றும் ரித்தேஷ் பாண்டே (ஜன் சுராஜ் – கர்கஹார்) ஆகியோரும் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
மொத்தம் 243 இடங்களில் 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்காக பிரதமர் மோடி, தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்திருந்தனர்.
இந்த 18 மாவட்டங்களில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் (அதில் 122 பெண்கள்), 3.75 கோடி வாக்காளர்கள், மற்றும் 45,341 வாக்குச்சாவடிகள் உள்ளன.
2020 தேர்தலில், இந்த 121 தொகுதிகளில் மகா கூட்டணி 61 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 59 இடங்களிலும், லோக் ஜன சக்தி கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றது. அதில் ஆர்ஜேடி 42, காங்கிரஸ் 8, இடதுசாரிகள் 11, பாஜக 32, ஜேடியு 23 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன.