ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் மீது ஜார்க்கண்ட் வெற்றி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழகம் – ஜார்க்கண்ட் அணிகள் மோதிய போட்டியில், ஜார்க்கண்ட் அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் ஜார்க்கண்ட் அணி 132.1 ஓவர்களில் 419 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இஷான் கிஷன் 173 ரன்கள், சாஹில் ராஜ் 77 ரன்கள் எடுத்தனர்.
பதிலுக்கு, தமிழகம் முதல் இன்னிங்ஸில் 50.4 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து, பாலோ-ஆன் பெற்றது. 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழகம், நேற்று கடைசி நாள் ஆட்டத்தில் 79 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ஆந்த்ரே சித்தார்த் 80 ரன்கள், ஷாருக் கான் 37, பாபா இந்திரஜித் 22 ரன்கள் எடுத்தனர். ஜார்க்கண்ட் அணிக்காக ரிஷவ் ராஜ் 4, அனுகுல் ராய் 3, சாஹில் ராஜ் 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதன் மூலம், ஜார்க்கண்ட் அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 7 புள்ளிகளை பெற்றது.