ஆசிய இளம் விளையாட்டில் தங்கம் வென்ற அபினேஷுக்கு வடுவூரில் உற்சாக வரவேற்பு
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் தங்கம் கைப்பற்றின. இந்திய ஆண்கள் அணியில் திருவாரூர் மாவட்டம் வடுவூரைச் சேர்ந்த 17 வயது அபினேஷும் இடம் பெற்றார்.
தங்கப் பதக்கம் வென்றதும், நேற்று தனது ஊரான வடுவூருக்கு வந்த அபினேஷுக்கு அப்பகுதி மக்கள் வீர வரவேற்பு அளித்தனர். திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அவருக்கு, வழிநெடுகிலும் மக்கள் மாலைகள் அணிவித்து, சால்வை போர்த்தி பாராட்டினார்கள்.
விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு, அபினேஷை வாழ்த்தினார். தொடர்ந்து வடுவூர் உட்புற விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் திருவாரூர் அமெச்சூர் கபடி சங்க செயலாளர் ராஜராஜேந்திரன், வடுவூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி செயலாளர் சாமிநாதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வழங்கிய ₹25 லட்சம் நிதி உதவிக்காக அபினேஷ் நன்றி தெரிவித்தார்.
சிறுவயதில் தந்தை மோகன் தாஸ் உயிரிழந்த நிலையில், தாய் தனலட்சுமி, இரண்டு சகோதரிகளுடன் வளர்ந்த அபினேஷ், வடுவூர் அரசு உதவிப் பள்ளியில் 7-ம் வகுப்பு வரை படித்து பின்னர் தேனி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பள்ளியில் பயிற்சி பெற்றார். தற்போது வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு கல்லூரி படிப்பில் பயின்று வருகிறார்.