இந்திய உள்கட்டமைப்பில் ரூ.44,000 கோடி முதலீடு செய்யும் டிபி வேர்ல்டு
இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களில் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.44,000 கோடி) முதலீடு செய்வதாக சரக்கு போக்குவரத்து துறையில் செயல்படும் டிபி வேர்ல்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
டிபி வேர்ல்டு குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுல்தான் அகமது பின் சுலேயம் கூறியது வருமாறு:
“இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோக சங்கிலி உட்கட்டமைப்பை மேம்படுத்த இம்முதலீடு செய்யப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வரும் எங்கள் நிறுவனம் இதுவரை 3 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது. தற்போது கூடுதலாக 5 பில்லியன் டாலர் முதலீடு செய்வது, இந்தியாவின் உலக வர்த்தக போட்டித் திறனை உயர்த்தும்.”
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“இந்த புதிய முதலீடு, இந்தியாவின் கடல்சார் மற்றும் தளவாட துறையை வலுப்படுத்தி, உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை மேலும் உயர்த்தும். இது நாங்கள் உருவாக்கும் நீண்டகால வளர்ச்சி கூட்டாண்மையின் ஒரு பகுதியாகும்.”