சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக புதிய செயலி – தேவசம் போர்டு தகவல்
சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல பூஜை நவம்பர் 17 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற உள்ளது. இதற்கான கோயில் நடை நவம்பர் 16ல் திறக்கப்படும். மண்டலமும் மகர பூஜையும் நடைபெறும் இந்த காலத்தில், ஐயப்பன் தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால், பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் தேவசம் அமைச்சர் வி.என். வாசவன் தலைமையில் நடைபெற்றது.
தேவசம் போர்டு செயலர் எம்.ஜி. ராஜமாணிக்கம் தெரிவித்ததாவது:
தற்போது பக்தர்கள் ஆன்லைன் மூலம் பல சேவைகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், பக்தர்களின் வசதிக்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய பலமொழி செயலி விரைவில் அறிமுகமாகிறது. இந்த செயலியில் தரிசனம், தங்குமிடம், அவசர உதவி, மருத்துவ சேவை, காலநிலை தகவல் உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கும். தேவையான உதவிக்காக செயலியில் கொடுக்கப்பட்ட எண்கள் மூலம் தொடர்பு கொள்ளவும் முடியும்.
வாகன வசதி – கட்டுப்பாட்டு அறைகள்
நிலக்கல் பகுதியில் வழக்கத்தை விட 1,500 வாகனங்களுக்கு கூடுதல் நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களின் பாதுகாப்பு, ஒழுங்கு மற்றும் தடையற்ற போக்குவரத்தை கண்காணிக்க மூன்று புதிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுகின்றன. இவை பத்தினம்திட்டா, எருமெലി உள்ளிட்ட இடங்களின் போக்குவரத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும்.
அதேபோல், இந்த ஆண்டில் கேரள அரசு சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிலக்கல் – பம்பை இடையே 24 மணி நேரமும் சுற்றிவரும் முறையில் பேருந்துகள் இயங்கும்.
மருத்துவ வசதி – காப்பீடு திட்டம்
இதய நோய் உள்ளிட்ட அவசர நிலை உடல்நலச் சிக்கல்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான நிதி ஆதரவுக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து விருப்பக் கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும்.
பதிவு செய்த பக்தர்கள், கேரளாவிற்கு நுழையும் தருணம் முதல் வெளியேறும் வரை காப்பீட்டு பாதுகாப்பு பெறுவார்கள். கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடி முன்பதிவு செய்தவர்களுக்கு நெரிசல் இல்லாத நேரத்தில் தரிசனம் வழங்கப்படும். எனவே, முடிந்தவரை ஸ்பாட் புக்கிங்கை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விரைவில் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மேலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.