யார் இந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ்? – டெக் உலகை மாற்றிய இந்திய இளம் தலைவர்!
உலக தொழில்நுட்ப துறையில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வரும் ‘பெர்ப்ளெக்சிட்டி’ நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், தற்போது இந்தியாவின் இளம் பில்லியனராக பெயர் பெற்றுள்ளார். 31 வயதான இவரின் செல்வம் சுமார் ரூ.21,190 கோடி என மதிப்பிடப்படுகிறது. அவரின் பயணத்தை பார்த்தால் உண்மையிலேயே “ரியல் கேம்சேஞ்சர்” என்பதில் சந்தேகமே இல்லை.
சென்னையில் பிறந்து உலகத்தையே நோக்கியார்
1994 ஜூன் 7 அன்று சென்னை நகரில் பிறந்தார் அரவிந்த். சிறு வயதிலேயே கோடிங், கேட்ஜெட் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். பள்ளிக்கல்விக்குப் பிறகு ‘மெட்ராஸ் ஐஐடி’-யில் மின்னணு பொறியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார். படிக்கும் காலத்திலேயே தானறிந்ததை பிறருடன் பகிர்ந்து வந்தவர்.
பின்னர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா யுனிவர்சிட்டி, பெர்க்லியில் கம்ப்யூட்டர் சயின்ஸில் முனைவர் பட்டம் பெற்றார். செயற்கை நுண்ணறிவில் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
ஏஐ துறையில் சிறந்த அனுபவம்
ஐஐடி பின்னணி கொண்ட அரவிந்த் உலகின் முன்னணி நிறுவங்களான OpenAI, DeepMind போன்ற ஏஐ ஆய்வகங்களில் பணியாற்றினார். OpenAI-யின் புகழ்பெற்ற DALL·E2 திட்டத்தில் முக்கிய பங்காற்றியவர். உரையை படமாக மாற்றும் தொழில்நுட்பத்தில் இவர் பெரிய பங்களிப்பு செய்துள்ளார்.
Perplexity AI – புதிய தேடுபொறியின் புரட்சி
2022 டிசம்பரில் டெனிஸ் யாரட்ஸ், ஜானி ஹோ, ஆண்டி கோவின்ஸ்கி ஆகியோர்களுடன் இணைந்து Perplexity AI-யை தொடங்கினார். ஏஐ மற்றும் மெஷின் லெர்னிங்கில் நிபுணத்துவம் பெற்ற குழு இது.
Perplexity AI, பாரம்பரிய தேடுபொறிகளைவிட வித்தியாசமாக, நேரடி உரையாடல் பாணியில் ஆழமான தகவல்களை வழங்குகிறது. இலவசமாக பயன்படுத்தலாம்; அதேசமயம் பிரீமியம் ‘Perplexity Pro’ வசதியும் உள்ளது.
இந்தியாவில் ஏர்டெல் பயனர்கள் இதை ஒரு வருடம் இலவசமாகப் பயன்படுத்தும் வாய்ப்பும் பெற்றுள்ளனர். தற்போது மாதத்திற்கு சுமார் 120 மில்லியன் பயனர்கள் Perplexity-யை அணுகுகின்றனர். நிறுவன மதிப்பு சுமார் 18 பில்லியன் டாலர்கள்.
ஆப்பிள், மெட்டா போன்ற நிறுவனங்கள் வாங்க முனைந்தபோதும், தனது நிறுவனம் சுயாதீனமாகவே இயங்க வேண்டும் என முடிவு செய்தார். 2028-ல் IPO வெளியிட திட்டமிட்டுள்ளார்.
சர்வதேச அங்கீகாரம்
2024-ல் டைம் இதழ் வெளியிட்ட ‘Most Influential in AI’ பட்டியலில் இடம் பெற்றார்.
எளிமையான வாழ்க்கை – உயர்ந்த இலக்குகள்
பில்லியனராக இருந்தாலும் சிம்பிள் வாழ்க்கை வாழும் அரவிந்த், தனது நேரத்தை சென்னையும் சிலிகான் வாலியையும் சமமாகப் பகிர்கிறார். வாகன சேகரிப்பில் ஆர்வம் உடையவர். இந்தியாவில் இன்ஜினியரிங் ஹப்பை உருவாக்கவும், ஏஐ ஸ்டார்ட்அப்களை ஆதரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இன்று உலகளவில் ஏஐ-க்கு மிகப்பெரிய தேவை உருவாகி வரும் நிலையில், 31 வயது அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இன்னும் உயரம் நோக்கி செல்வதற்கான தொடக்க நிலையிலே உள்ளார்.