8வது ஊதியக் குழு தலைவர் நியமனம் — பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் திருத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்ட 8வது ஊதியக் குழு உறுப்பினர் நியமனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
“மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் கூட்டு ஆலோசனைக் குழுவுடன் ஆலோசனை நடைபெற்றது. அதன் அடிப்படையில் 8வது ஊதியக் குழுவின் செயல்பாட்டு விதிமுறைகள் (TOR) இறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.”
இந்தக் குழு, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சலுகைகள் தொடர்பாக திருத்தம் செய்ய பரிந்துரைகளை வழங்கும்.
8வது ஊதியக் குழுவின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
உறுப்பினராக பெங்களூரு பல்கலைக்கழகப் பேராசிரியர் புலக் கோஷ் மற்றும் உறுப்பினர்-செயலராக பங்கஜ் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு தனது பரிந்துரைகளை 18 மாதங்களுக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, ஊதிய திருத்தத்திற்காக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஊதியக் குழுவை அமைப்பது வழக்கம். அதன்படி, 7வது ஊதியக் குழு 2014 பிப்ரவரி மாதத்தில் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டன.
தற்போதைய திட்டப்படி, 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படலாம். ஆனால் குழு தனது அறிக்கையை 2027 முதல் காலாண்டில் சமர்ப்பித்தால், 2028 முதல் காலாண்டுக்குள் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், பணவீக்கம் அதிகரிப்பை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) ஆண்டுக்கு இருவேளை மாற்றி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.