நெல்லையப்பர் கோயிலுக்கு குட்டி யானை கொண்டு வர தடைக்கு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: வனத்துறை, அறநிலையத் துறை, கோயில் நிர்வாகத்திடம் விளக்கம் கோரி நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு உத்தராகண்டில் இருந்து குட்டி யானையை கொண்டு வருவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கோயில் நிர்வாகம் விளக்கம் அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையப்பர் கோயிலின் யானையான காந்திமதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜனவரியில் இறந்தது. இதனைத் தொடர்ந்து, கோயிலுக்காக உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து சுமார் 5 வயது குட்டி யானையை கொண்டு வர தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, “பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா” (People for Cattle in India) என்ற அமைப்பு பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், உத்தராகண்ட் வனத்துறையின் சரணாலயத்தில் தாயுடன் மற்றும் கூட்டத்துடன் வாழும் குட்டி யானையை பிரித்து கொண்டு வருவது தவறு என கூறப்பட்டுள்ளது. மேலும், முன்பு நெல்லையப்பர் கோயிலில் இருந்த காந்திமதி யானை தேவையான பராமரிப்பு இல்லாமையால் உயிரிழந்தது எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், திருச்செந்தூரில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தது உள்ளிட்ட தமிழக கோயில்களில் நடந்த பல சம்பவங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தனிநபர்கள் அல்லது கோயில்களுக்கு யானை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் முன்பு உத்தரவிட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நெல்லையப்பர் கோயிலுக்கு ரோபோ யானை வழங்க தயாராக இருப்பதால், உத்தராகண்டில் இருந்து குட்டி யானையை கொண்டு வர மாநில அரசுக்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை அந்த அமைப்பு கோரியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, தமிழக வனத்துறை, இந்து சமய அறநிலையத் துறை, நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் ஆகியோர் வழக்கில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.