பிளஸ் 1 மாணவர்களுக்கு விரைவில் இலவச சைக்கிள் விநியோகம் தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2025–26 கல்வியாண்டிற்கான மாணவ, மாணவிகளுக்கு அவோன் மற்றும் ஹீரோ நிறுவனங்களிடமிருந்து சைக்கிள்கள் கொள்முதல் செய்ய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, மாணவிகளுக்கான சைக்கிள் ஒன்றின் விலை ரூ.4,250 என்றும், மாணவர்களுக்கானது ரூ.4,375 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சைக்கிள் விநியோகத்தைத் தொடங்க நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
முதல்வர் இந்தத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கிய பின், மாவட்ட அளவில் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் மூன்று ஆண்டு உத்தரவாத அட்டை வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சைக்கிள்கள் வழங்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் குறைந்தது மூன்று நாட்களுக்கு பழுது நீக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும். அந்த முகாம்களை சைக்கிள் நிறுவனங்களே ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.