மிரட்டும் ‘மோந்தா’ புயல்: ஆந்திரா, ஒடிசாவில் ரெட் அலர்ட் – ரயில்கள், விமானங்கள் ரத்து
வங்கக் கடலில் தீவிரமாக உருவாகியுள்ள ‘மோந்தா’ புயல் இன்று மாலை அல்லது இரவு காக்கிநாடாவைச் சுற்றிய மச்சிலிப்பட்டினம்–கலிங்கப்பட்டினம் இடையே கரையைத் தாக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பல ரயில்கள் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒடிசாவில் கனமழை – எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
புயல் தாக்கம் அதிகமாக இருக்கும் தெற்கு ஒடிசாவின் மல்கன்கிரி, கோராபுட், ராயகடா, கஜபதி, கஞ்சம், நபரங்பூர், கலஹந்தி மற்றும் காந்தமால் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தாழ்வான மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களை அரசு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளது.
மேலும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் தீயணைப்பு துறையைச் சேர்ந்த மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தயார்நிலையில் உள்ளனர்.
ஒடிசாவின் நவரங்பூர், கலஹந்தி, காந்த்மால், நயாகர், கோர்தா மற்றும் பூரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் வரும் 30-ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
ஆந்திராவின் கடலோர பகுதிகளில் கடும் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 19 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், நந்தியால், கடப்பா, அன்னமய்யா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், கர்னூல், அனந்தபூர், ஸ்ரீ சத்யசாய், சித்தூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சார்பில் 242 மருத்துவ முகாம்கள் மற்றும் 283 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. மீட்பு நடவடிக்கைக்காக 11 தேசிய மீட்புப் படை, 12 மாநில மீட்புப் படை குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.
விமானங்கள் ரத்து
விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 32 விமானங்கள், மோந்தா புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் விஜயவாடா விமான நிலையத்திலிருந்து டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவிருந்த 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. திருப்பதி விமான நிலையத்திலும் நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ரயில்கள் ரத்து மற்றும் மாற்றம்
விசாகப்பட்டினம் வழியாக செல்லவிருந்த 32 ரயில்கள் பயணிகளின் பாதுகாப்புக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன. புவனேஸ்வர்–ஜகதல்பூர் மற்றும் ரூர்கேலா–ஜகதல்பூர் ரயில்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. டாடாநகர்–எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் திருப்பி விடப்பட்டுள்ளது.
தெற்கு மத்திய ரயில்வே சில ரயில்களை முழுமையாகவும் சிலவற்றை பகுதியளவிலும் ரத்து செய்து புதிய அட்டவணை வெளியிட்டுள்ளது. பயணிகள் பயணத்திற்கு முன் தங்களின் ரயில் நிலையை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே அமைச்சரின் உத்தரவு
மோந்தா புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த விஜயவாடா, விசாகப்பட்டினம் மற்றும் குண்டூர் பிரிவுகளில் கட்டுப்பாட்டு அறைகளை செயல்படுத்தவும், அவசரப் பொருட்கள் மற்றும் மனிதவளத்தை தயாராக வைத்திருக்கவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
ஒடிசாவில் 2,048 நிவாரண முகாம்கள்
மோந்தா புயலால் பாதிக்கப்படக்கூடிய மக்களை தங்க வைக்க ஒடிசா அரசு 2,048 நிவாரண முகாம்களைத் திறந்துள்ளது.
முதல்வர் மோகன் சரண் மஞ்சி, “எங்கள் அரசு முழுமையாக தயாராக உள்ளது; இதுவரை 11,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்,” என்று தெரிவித்துள்ளார்.