வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் – திருத்தணியில் புஷ்பாஞ்சலி விழா சிறப்பாக நடைபெற்றது
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று முன்தினம் (அக்.26) சூரசம்ஹாரம் வைபவம் நடைபெற்றது. “அரோகரா” கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வடபழனியில் கந்த சஷ்டி விழா கடந்த அக்.21-ம் தேதி வரசித்தி விநாயகர் மூஷிக வாகன புறப்பாட்டுடன் தொடங்கியது. அதன் பின்னர் தினமும் காலை, மாலை பூஜைகள், வீதி உலா ஆகியவை நடைபெற்றன. நேற்று உச்சிகாலத்தில் லட்சார்ச்சனை நிறைவுற்றதும், தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. மாலை 5.30 மணிக்கு முருகப் பெருமான், அம்மனிடம் வேல் பெற்று, சூரபத்மனை வதம் செய்ய புறப்பட்டார்.
இரவு நடைபெற்ற சூரசம்ஹாரத்தில், யானை, சிங்கம், ஆடு போன்ற பல ரூபங்களில் தோன்றிய சூரபத்மனை முருகப் பெருமான் வேலால் வதம் செய்த காட்சி பக்தர்களை மயக்கியது. நேற்று (அக்.27) வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. திருக்கல்யாணம் முடிந்ததும் பக்தர்கள் மொய் எழுதும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். இரவு 8 மணிக்கு திருமண விருந்து அளிக்கப்படுகிறது.
இதேபோன்று, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பெசன்ட்நகர் அறுபடைவீடு முருகன் கோயில், கந்தக்கோட்டம், குன்றத்தூர், திருப்போரூர் உள்ளிட்ட இடங்களிலும் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதிகாலையில் மூலவர் சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4 மணியளவில், சுந்தர விநாயகர் கோயிலிலிருந்து பல்வேறு மலர்களை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்து சரவணப் பொய்கை வழியாக சுவாமிக்கு புஷ்பாஞ்சலி செய்தனர். பின்னர் உற்சவர் சண்முகருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.