திருச்செந்தூரில் அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

Date:

திருச்செந்தூரில் அரோகரா கோஷம் முழங்க சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவின் உச்சநிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை கடற்கரையில் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” என முழங்கிய நிலையில், கடற்கரையில் நடந்த இந்த நிகழ்ச்சி ஆன்மிக உற்சாகத்துடன் நடைபெற்றது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக விளங்கும் திருச்செந்தூரில், கந்தசஷ்டி விழா அக்டோபர் 22ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அதில் முக்கியமான நிகழ்ச்சி சூரசம்ஹாரம், ஆறாம் நாளான நேற்று நடைபெற்றது.

காலை யாகசாலை பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு, சண்முக விலாசம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டார்.

மாலை 4.30 மணிக்கு, போர்க் கோலத்தில் சுவாமி கடற்கரைக்கு எழுந்தருளினார். அதே சமயம், சூரபத்மனும் பரிவாரங்களுடன் கடற்கரையில் தோன்றினார். முதலில் கஜமுகம், பின்னர் சிங்கமுகம், இறுதியில் தன் இயல்புருவத்தில் தோன்றிய சூரபத்மனை சுவாமி தமது வேலால் வதம் செய்தார். அதன்பின் சேவலாக உருமாறிய சூரனை முருகன் தம் வாகனமாக ஏற்றார்.

அந்தக் கணத்தில், கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே சுருதியில் “அரோகரா! அரோகரா!” என கோஷமிட்டனர். பக்தர்கள் கடலில் புனிதநீராடி தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.

பின்னர், சுவாமி வள்ளி – தெய்வானையுடன் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி மகாதீபாராதனை ஏற்றுக் கொண்டார். இரவில், 108 மகாதேவர் சந்நிதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், செந்தில்குமார், புகழேந்தி, ஆணையர் சந்திரமௌலி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். பாதுகாப்பு பணிக்காக 4,300 போலீஸார் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

இன்று திருக்கல்யாணம்:

கந்தசஷ்டி விழாவின் ஏழாம் நாளான இன்று (அக்டோபர் 28), திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதிகாலை தெய்வானை அம்மன் தபசு காட்சிக்காக எழுந்தருளி, மாலை சுவாமி குமரவிடங்கபெருமான் தோன்றுவார். பின்னர், தோள்மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று, காலை 11 மணிக்கு மேல் திருக்கல்யாண மண்டபத்தில் முருக–தெய்வானை திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தங்கம் விலை தொடர்ச்சியாக சரிவு – வெள்ளி விலையும் குறைந்தது!

தங்கம் விலை தொடர்ச்சியாக சரிவு – வெள்ளி விலையும் குறைந்தது! சென்னையில் இன்று...

பிஹாரில் தே.ஜ.கூட்டணிக்கும் – ஜன் சுராஜுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி: பிரசாந்த் கிஷோர்

பிஹாரில் தே.ஜ.கூட்டணிக்கும் – ஜன் சுராஜுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி: பிரசாந்த்...

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி – எந்த வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் தடுக்க முடியாது

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி – எந்த வான் பாதுகாப்பு...

இந்தாண்டு 1,500 பேருக்கு டெங்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

இந்தாண்டு 1,500 பேருக்கு டெங்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் தமிழகத்தில் இந்த...