ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு!
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய சூழலில் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதம் என்ற நிலையிலேயே நீடிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
உலக அளவில் குறிப்பாக ஈரான் போர் காரணமாகப் பொருளாதாரச் சூழலில் நிலையற்றத் தன்மை நிலவி வருவதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதார ஆதாரங்கள் மிகவும் வலுவாக உள்ளதாக விளக்கம் அளித்தார். சர்வதேச நெருக்கடிகளால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்தியப் பொருளாதாரத்தின் நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் தற்போதைக்கு உயராமல் நிலையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.





