நாடு முழுவதும் பொது சிவில் சட்டம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தல்
டேராடூன்:
சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் என்றும், அதனை முன்னிறுத்தி உத்தரகண்ட் மாநிலத்தைப் பின்பற்றி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் நடைபெற்ற முன்னாள் ராணுவத்தினருக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், உத்தரகண்ட் அரசு ஏற்கனவே இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி முன்னோடியாகத் திகழ்வதைச் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சட்டத்தின் மூலம் குழந்தை திருமணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் ‘லிவ்-இன்’ (Live-in) உறவுகளைப் பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டது. இத்தகைய நடைமுறைகள் சமூக ஒழுங்கிற்கும் ஒற்றுமைக்கும் அவசியம் என்பதால், மத்திய அரசு இதனை நாடு தழுவிய அளவில் கொண்டு வர வேண்டும் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.






