தமிழகம் வருகை: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் மூன்று நாள் சுற்றுப்பயணம்
குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்று நாள் தமிழ்நாடு பயணத்தை தொடங்குகிறார்.
குடியரசு துணைத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அவர் கோவை, திருப்பூர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
அதற்கு முன்பு, அவர் செஷெல்ஸ் நாட்டுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் டாக்டர் பாட்ரிக் ஹெர்மினியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து இன்று (அக். 28) அவர் கோவை திரும்பவுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பின்னர், கொடிசியா வர்த்தக மையத்தில் கோவை மக்கள் மன்றம் சார்பில் அவருக்கு பொதுமக்கள் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன்பின், கோவை டவுன்ஹால் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் அவர், பேரூர் மடத்தில் நடைபெறும் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார்.
அன்று மாலை திருப்பூர் செல்கிற சி.பி. ராதாகிருஷ்ணன், அங்குள்ள திருப்பூர் குமரன் மற்றும் மகாத்மா காந்தி சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார்.
நாளை (அக். 29) திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, பின்னர் மதுரை நோக்கி பயணம் மேற்கொள்வார். மதுரையில், அவர் மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வார்.
அதனைத் தொடர்ந்து, அக். 30 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார்.