சீன சிசிடிவி (CCTV) கேமராக்களுக்குத் தடையா? – மத்திய அரசின் புதிய தரக்கட்டுப்பாட்டு விதிகளால் அதிரடி!
இந்தியாவில் இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன நிறுவனங்களின் சிசிடிவி கேமராக்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசியப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்யும் நோக்கில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து சிசிடிவி கேமராக்களும் ‘Standardisation Testing and Quality Certification’ (STQC) சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் பாதுகாப்புச் சூழல் காரணமாக, சீனாவின் முன்னணி நிறுவனங்களான Hikvision, Dahua மற்றும் TP-Link ஆகியவற்றின் தயாரிப்புகளுக்கும், சீன சிப்செட்களைப் பயன்படுத்தும் கேமராக்களுக்கும் இந்தச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. தரவுத் திருட்டு (Data Theft) மற்றும் வெளிநாடுகளில் இருந்து கேமராக்களைச் சட்டவிரோதமாகக் கட்டுப்படுத்தும் (Remote Hacking) அபாயத்தைத் தவிர்க்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உரியச் சான்றிதழ் இல்லாத சீன கேமராக்களின் விற்பனைக்கு விரைவில் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் மின்னணுச் சாதனங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.






