கர்நாடகாவில் ஒற்றை யானை அட்டகாசம்: ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதி!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குப்புகோடு கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை, அங்கிருந்த குடியிருப்புகளைச் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்திற்குள் நுழைந்த அந்த யானை, கிருஷ்ணப்பா என்பவரது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை ஆக்ரோஷமாக முட்டித் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. ஆட்டோவை உருக்குலைத்த பின், அந்த யானை அருகிலுள்ள தோட்டத்திற்குள் புகுந்து தஞ்சமடைந்துள்ளது.
இந்தத் திடீர் யானை ஊடுருவலால் குப்புகோடு கிராம மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், வனத்துறையினர் உடனடியாகத் தலையிட்டு அந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும், மீண்டும் குடியிருப்புப் பகுதிக்குள் யானைகள் நுழையாதவாறு நிரந்தரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கிராம மக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.






