புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா: லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!
புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அண்ணாசாலையில் அமைந்துள்ள ஜெயின் கோவிலில் இருந்து ஜெயின் சமூகத்தினர் சார்பில் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது. பாரம்பரிய மரபின்படி மகாவீர் சாமியின் சிலையைச் சிறப்பு அலங்காரத்துடன் பக்தி உணர்வுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்ற இந்த நிகழ்வில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறார்கள் என அனைத்து தரப்பினரும் திரளாகக் கலந்து கொண்டு பக்திப் பாடல்களைப் பாடி உற்சாகமாகப் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலம் காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட வள்ளலார் சாலையில் உள்ள வெங்கட்ட நகர் பகுதியை வந்தடைந்தபோது, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தனது ஆதரவாளர்களுடன் நேரில் வந்து ஜெயின் சமூகத்தினரை மலர் தூவி உற்சாகமாக வரவேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக சமாதானத்திற்கும் அஹிம்சை கொள்கைக்கும் மகாவீர் சாமியின் உபதேசங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டு, அனைவருக்கும் தனது மகா வீர் ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியது.






