காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!
காஞ்சிபுரம் உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 9ஆம் நாள் ‘மாவடி சேவை’ உற்சவம் நேற்று நடைபெற்றது.
பார்வதி தேவி மாமரத்தடியில் சிவபெருமானைப் பூஜித்த புராண நிகழ்வை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், ஏலவார்குழலி அம்பாளுடன் ஏகாம்பரநாதர் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி மாவடி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேளதாளங்கள் முழங்க நான்கு ராஜ வீதிகளிலும் சுவாமி வீதியுலா வந்தபோது, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினமும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாவடி சேவை உற்சவம் விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது.






