தார்வாட் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை: பனிக்கட்டிகளால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!
தார்வாட்: கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் திடீரெனப் பெய்த பலத்த ஆலங்கட்டி மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தார்வாட் மாவட்டத்தின் கல்கட்கி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எதிர்பாராத விதமாகப் பெய்த இந்த ஆலங்கட்டி மழையால் ஒட்டுமொத்தப் பகுதியும் பனிப்பொழிவு ஏற்பட்டது போன்ற தோற்றத்தை அளித்தது.
போக்குவரத்து பாதிப்பு:
மழையின் தீவிரத்தால் நகரின் பிரதான சாலைகள், தெருக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் மேற்கூரைகள் என எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகள் வெள்ளைப் போர்வை போர்த்தியது போலக் குவிந்து கிடந்தன. சாலைகளில் அதிகப்படியான பனிக்கட்டிகள் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
மக்கள் அவதி:
பல இடங்களில் வீடுகளின் வாசல்களிலேயே பனிக்கட்டிகள் மலை போலக் குவிந்ததால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். கோடை வெப்பம் நிலவி வந்த சூழலில் இந்தத் திடீர் ஆலங்கட்டி மழை வெப்பத்தைத் தணித்தாலும், அன்றாடப் பணிகளை மேற்கொள்வதில் பொதுமக்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தது.