அசாம் தேர்தல்: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூத்த எம்.பி. – அதிரடி திருப்பம்!
திஸ்பூர்: அசாம் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், காங்கிரஸ் கட்சிக்குப் பேரிடியாக அக்கட்சியின் மூத்த தலைவரும், சிட்டிங் எம்.பி-யுமான பிரத்யுத் போர்டோலாய் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, அங்கு ஆளுங்கட்சியான பாஜகவிற்குப் பெரும் பலத்தைத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
தொடரும் பின்னடைவுகள்:
அசாமில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் தீவிரமாக முயன்று வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய முகங்கள் அடுத்தடுத்து விலகுவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு முன்னாள் தலைவர் பூபன் குமார் போரா விலகியதைத் தொடர்ந்து, தற்போது போர்டோலாயும் வெளியேறியுள்ளார். காங்கிரஸிற்கு இருந்த மூன்று எம்.பி-க்களில் ஒருவர் தற்போது ஆளுங்கட்சிக்குச் சென்றிருப்பது அக்கட்சியின் செல்வாக்கைச் சரித்துள்ளது.
விலகலுக்கான காரணம் என்ன?
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிற்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள போர்டோலாய், அதில் விலகலுக்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை. இருப்பினும், அசாமில் கௌரவ் கோகோய் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதால் ஏற்பட்ட அதிருப்தி அல்லது வேட்பாளர் தேர்வில் நிலவும் உட்கட்சிப் பூசல்களே இதற்குக் காரணம் எனப் பிரியங்கா காந்தி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் களம்:
அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் 75 இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சியைத் தக்கவைத்த நிலையில், இந்த முறையும் அதே முனைப்பில் களம் காண்கிறது. 10 ஆண்டுக்கால பாஜக ஆட்சியை வீழ்த்த நினைக்கும் காங்கிரஸிற்கு, தேர்தலுக்குச் சில வாரங்களுக்கு முன் ஏற்பட்டுள்ள இந்தத் தலைவர்களின் வெளியேற்றம் பெரும் சவாலாக மாறியுள்ளது. இதன் முடிவுகள் மே 6-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரியவரும்.