திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா உற்சாகம் – இன்று மாலை சூரசம்ஹாரம்; பக்தர்கள் திரளாக கூடினர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (அக்டோபர் 27) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி, திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்த சஷ்டி விழா, இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கியதுடன், மூலவருக்கு காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது.
பகல் 12.45 மணிக்கு, தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையிலிருந்து புறப்பட்டு சண்முக விலாசம் சென்றார். பின்னர், மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹார நிகழ்வுக்காக கடற்கரைக்கு எழுந்தருளுகிறார்.
சூரசம்ஹார நிகழ்ச்சியில் சுவாமி, கஜமுகம், சிங்கமுகம், பின்னர் சுயரூபம் எடுத்த சூரபத்மனை வதம் செய்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதன் பின் சுவாமி கிரிபிரகாரத்தில் உலா வந்து கோயிலில் புகழ் அருளுகிறார்.
இரவு நேரத்தில் பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் வழங்கப்படும். நாளை (அக்.28) இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது.
விழாவை முன்னிட்டு கடந்த ஆறு நாட்களாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடாக சுமார் 4,000 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில் மற்றும் கடற்கரை பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் சென்னை தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில், மற்றும் திருநெல்வேலி–திருச்செந்தூர் இடையே சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.