நெதன்யாகு படுகொலை? ஈரானின் வதந்திக்குக் காபி குடித்தபடி பதிலடி கொடுத்த இஸ்ரேல் பிரதமர்!
ஜெருசலேம்:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பிப்ரவரி 28 முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, நெதன்யாகு கொல்லப்பட்டதாகப் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன.
வதந்தியின் பின்னணி:
போரின் தொடக்கத்தில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சூழலில், அதற்குப் பழிவாங்க நெதன்யாகு படுகொலை செய்யப்பட்டதாக ஈரான் தரப்பு தகவல்களைப் பரப்பியது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் வெளியான ஒரு வீடியோவில் நெதன்யாகுவின் கையில் 6 விரல்கள் இருப்பது போலத் தெரிந்தது. இது ஏஐ (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்றும், நிஜமான நெதன்யாகு ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார் என்றும் சதித் திட்டக் கோட்பாடுகள் (Conspiracy theories) முன்வைக்கப்பட்டன.
வீடியோ மூலம் பதிலடி:
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நெதன்யாகு தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு ஓட்டலில் அமர்ந்து காபி குடித்தபடி நகைச்சுவையாகப் பேசும் அவர், “நான் காபிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறேன் (I’m dying for coffee)” என்று கூறி தனது மரண வதந்தியைக் கிண்டல் செய்துள்ளார். மேலும், “எனது விரல்களை எண்ண வேண்டுமா?” என்று கேட்டுத் தனது கைகளை உயர்த்தி 5 விரல்கள் இருப்பதைக் காட்டி வதந்திகளைப் பொய்யாக்கினார். “நாங்கள் ஈரான் மற்றும் லெபனானில் மிகவும் வலிமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்” என்றும் அவர் அந்த வீடியோவில் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.