அசாமில் ரூ. 22,860 கோடி மதிப்பிலான திட்டங்கள்: ஷில்லாங் – சில்சார் 4 வழிச் சாலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!
கௌகாத்தி:
அசாம் மாநிலத்தின் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், ஷில்லாங் – சில்சார் இடையேயான பிரம்மாண்ட அதிவேக 4 வழிச்சாலை திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக அசாம் சென்றுள்ள பிரதமர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
பயண நேரத்தில் அதிரடி குறைப்பு:
சுமார் 22,860 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை சில்சார் பகுதியில் தொடங்கி வைத்த பிரதமர், இந்த அதிவேக வழித்தடத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்த புதிய 4 வழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு, கௌகாத்தி மற்றும் சில்சார் இடையேயான பயண நேரம் தற்போதுள்ள 8 மணி நேரத்திலிருந்து 5 மணிநேரமாக கணிசமாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி:
இந்தத் திட்டத்தின் மூலம் வடகிழக்கு மாநிலங்களின் இணைப்பு மேம்படுவதோடு, வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியாகவும் பெரும் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய இந்த முக்கிய அறிவிப்புகள் அசாம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.