ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்: 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு – மத்திய அரசு தகவல்
மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு இடையே, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்த வழியாகச் செல்லும் வெளிநாட்டுக் கப்பல்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இது குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர் ராஜேஷ்குமார், வெளிநாட்டுக் கப்பல்களில் பணியாற்றிய இந்திய மாலுமிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினார். மேலும், ஒரு மாலுமியைக் காணவில்லை என்றும், 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு குறித்த கவலையை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.