ஆட்டோவில் இந்தியப் பயணம்: 17 மாநிலங்களைக் கடந்த பிரிட்டிஷ் தம்பதி – வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
புது தில்லி: சொகுசு கார்களும், விமானப் பயணங்களும் தராத மனநிறைவை ஒரு சாதாரண ஆட்டோ பயணம் தங்களுக்குக் கொடுத்துள்ளதாக லண்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் தம்பதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
10 ஆண்டு லண்டன் வாழ்க்கை டூ இந்திய கிராமங்கள்:
லண்டனில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்த ஆடம் – ஜென்னி என்ற தம்பதி, இந்தியாவின் உண்மையான கலாச்சாரம் மற்றும் கிராமப்புற வாழ்க்கையை நேரடியாக அனுபவிக்க விரும்பினர். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த வாகனம் தான் ‘ஆட்டோ ரிக்ஷா’. இதுவரை இந்த தம்பதி ஆட்டோவிலேயே சுமார் 17 மாநிலங்களைக் கடந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணித்து சாதனை படைத்துள்ளனர்.
சவால்களும் அன்பும்:
இந்தியாவின் பரபரப்பான சாலைகளும், போக்குவரத்து நெரிசலும் தங்களுக்கு ஆரம்பத்தில் பெரும் சவாலாக இருந்ததாகக் குறிப்பிடும் இந்த தம்பதி, ஆனால் மக்கள் காட்டும் எல்லையற்ற அன்பு அந்தச் சிரமங்களை மறக்கச் செய்துவிட்டதாகக் கூறுகின்றனர். “சொகுசு வாகனங்களை விட, ஆட்டோவில் பயணிப்பதுதான் இந்திய மக்களுடன் எங்களை நெருக்கமாக இணைக்கிறது” என அவர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளனர்.
மக்களின் உபசரிப்பு:
தங்கள் பயணத்தின் போது வழியில் சந்திக்கும் சாமானிய மக்கள் தங்களை இன்முகத்துடன் வரவேற்று, தங்குவதற்கு இடமும், உணவும் அளித்து உதவி செய்வதாக ஆடம் – ஜென்னி தம்பதி நெகிழ்ந்து போயுள்ளனர். இந்தியாவின் மூலை முடுக்குகளில் தாங்கள் பெற்ற அனுபவங்களை ஒரு வீடியோவாக அவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.