“பொறுப்பற்ற எதிர்க்கட்சிகள்”: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் சாடல்
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்க்கட்சிகளை மிகக் கடுமையாகச் சாடினார். சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் என்பதால் மூத்த உறுப்பினர் ஜகதாம்பிகா பால் தலைமையில் நடைபெற்ற இந்த விவாதத்தின் போது, எதிர்க்கட்சிகள் உண்மையை முரணாகச் சித்தரிப்பதாகக் குற்றம் சாட்டிய அமித்ஷா, தனது அரசியல் பயணத்தில் இவ்வளவு பொறுப்பற்ற எதிர்க்கட்சிகளை இதுவரை பார்த்ததில்லை என ஆவேசமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, அவையை முடக்குவதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக உள்ளதாகக் குறிப்பிட்டதுடன், சபாநாயகர் பாரபட்சமாகச் செயல்படுவதாகக் கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும், அவர் அனைத்து உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பளிப்பதாகவும் விளக்கமளித்தார். 293 உறுப்பினர்களுடன் ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளதால், இந்தத் தீர்மானம் தோல்வியடையவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், சபாநாயகர் குறித்து பொதுவெளியில் தேவையற்ற விவாதங்களை உருவாக்குவதற்கே எதிர்க்கட்சிகள் இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.