குடியரசுத் தலைவர் அவமதிப்பு: இந்திய அரசியலமைப்பிற்கு ஏற்பட்ட பெரும் இழுக்கு – பிரதமர் மோடி கடும் சாடல்
புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவமதிக்கப்பட்ட விவகாரம், இந்திய அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்தின் மகத்தான பாரம்பரியத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவமதித்ததற்காக மேற்கு வங்க மக்கள் திரிணாமூல் காங்கிரஸ் அரசை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
முன்னதாக, டெல்லியில் 18,300 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டங்கள் உள்ளிட்ட முக்கியப் பணிகளைப் பிரதமர் தொடங்கி வைத்தார். குறிப்பாக, 12.3 கிலோமீட்டர் நீளமுள்ள மஜ்லிஸ் பார்க் – மௌஜ்பூர் – பாபர்பூர் மெட்ரோ வழித்தடத்தைத் தொடங்கி வைத்த அவர், பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சியால் டெல்லி முன்னெப்போதும் இல்லாத வகையில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த விழாவின் போது, மேற்கு வங்க அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த பிரதமர், நாட்டின் உயரிய பதவியில் இருப்பவரை இழிவுபடுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டினார்.