குடியரசுத் தலைவர் அவமதிப்பு விவகாரம்: மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் நடைபெற்ற சந்தாலி பழங்குடியின மாநாட்டில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்ற புகார் தொடர்பாக, மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து இன்று மாலை 5 மணிக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மேற்கு வங்க தலைமைச் செயலாளருக்கு மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலில் பான்சிதேவா தொகுதிக்குட்பட்ட பிதான்நகரில் நடைபெறவிருந்த இந்த மாநாடு, கடைசி நேரத்தில் திடீரென கோசைன்பூருக்கு மாற்றப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற குடியரசுத் தலைவருக்கு மேற்கு வங்க அரசு சார்பில் முறையான உபசரிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசின் செயல்பாட்டிற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தைத் தீவிரமாக கையில் எடுத்துள்ளது. தலைமைச் செயலாளரின் அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.