பிஹார் தேர்தலுக்குப் பிறகு அச்சு ஊடக விளம்பரக் கட்டணம் 27% உயர்வு: மத்திய அரசு திட்டம்
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அச்சு ஊடகங்களுக்கு வழங்கப்படும் விளம்பரக் கட்டணங்களை 27% உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, “பாரம்பரிய ஊடகங்களில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஊடகங்களில் பணிபுரிவோரின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும், வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் அரசு அச்சு, தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறைகளில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
பிஹாரில் தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தவுடன் அச்சு ஊடக விளம்பரக் கட்டணங்களில் 27% உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும். இது 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நடைபெறுகிறது. பெரும்பாலும் அரசு விளம்பரங்களை நம்பி செயல்படும் பிராந்திய மற்றும் தேசிய அளவிலான சிறிய மற்றும் பெரிய செய்தித்தாள் நிறுவனங்கள் இதனால் பலன் பெறுவார்கள்,” என அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு 25%, 2013-ல் 19% உயர்வு செய்யப்பட்டது. தொலைக்காட்சி விளம்பரக் கட்டண உயர்வு குறித்தும் அரசு தற்போது பரிசீலித்து வருகிறது.