“ஈரானைத் தொடர்ந்து கியூபா மீது கவனம்”: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு, அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபாவாக இருக்கும் என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்தி வரும் போர் ஒரு வாரத்தை எட்டியுள்ள நிலையில், போர் எப்போது முடியும் என்ற கேள்வி உலகரங்கில் எழுந்துள்ளது. தொடக்கத்தில் இந்தப் போர் 5 வாரங்கள் வரை நீடிக்கலாம் என டிரம்ப் கணித்திருந்த போதிலும், அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவது சவாலாகப் பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த டிரம்ப், ஈரான் போரை முடிக்கத் தான் எந்தக் காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என்றும், ஈரானை வழிநடத்த விவேகமான ஒருவரை நியமிப்பதே தற்போதைய நோக்கம் என்றும் குறிப்பிட்டார். “முதலில் ஈரானை முடிப்போம், அதன் பிறகு கியூபா மீது கவனம் செலுத்துவோம்” என்று அவர் கூறியது சர்வதேச அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் கியூபா மீது, டிரம்பின் இந்தப் பார்வை கூடுதல் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.