அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்: போர்ப் பதற்றங்களுக்கு இடையே விளக்கம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அண்டை நாடுகளின் நிலப்பரப்பிலிருந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடுப்பதாலேயே, தற்காப்பு நடவடிக்கையாகத் தாங்கள் பதில் தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாக அதிபர் மசூத் விளக்கமளித்துள்ளார். மேலும், ஈரான் சரணடைய வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்துள்ள அவர், சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என்றும் ஈரானின் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த மோதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது பெரும் பதற்றம் நிலவி வருகிறது.