ஈரான் போரில் அமெரிக்காவுக்குப் படுதோல்வி? – சமூக வலைதளங்களில் வைரலாகும் ‘சீன நாஸ்டர்டாமஸ்’ ஜியாங் சூகின் கணிப்பு!
பெய்ஜிங்:
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ‘சீனாவின் நாஸ்டர்டாமஸ்’ என்று அழைக்கப்படும் பேராசிரியர் ஜியாங் சூகின் (Jiang Suqin) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கணித்த விஷயங்கள் தற்போது உண்மையாகி வருவது சர்வதேச அளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த ஜியாங் சூகின்?
பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தத்துவத் துறை பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஜியாங் சூகின், யூடியூப்பில் ‘வரலாற்றை முன்னறிவித்தல்’ (Forecasting History) என்ற நிகழ்ச்சி மூலம் உலகப் புகழ்பெற்றார். புவிசார் அரசியல் மாற்றங்களை வரலாற்றின் போக்கோடு ஒப்பிட்டு அவர் கூறும் கணிப்புகள் துல்லியமாக இருப்பதாகப் பலராலும் நம்பப்படுகிறது.
பலித்த இரண்டு முக்கிய ஆருடங்கள்:
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தற்போதைய சூழல் குறித்து அவர் மூன்று முக்கியக் கணிப்புகளை வெளியிட்டிருந்தார்:
- ட்ரம்பின் வெற்றி: 2024-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவார் என்று அவர் முதன்முதலாகக் கணித்தார்.
- ஈரான் மீது போர்: ட்ரம்ப் பதவியேற்றவுடன் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவுடன் இணைந்து ஈரான் மீது போர் தொடுப்பார் எனக் குறிப்பிட்டிருந்தார். தற்போது போர்க்களத்தில் நடக்கும் நிகழ்வுகள் இந்தக் கணிப்பை உறுதிப்படுத்தியுள்ளன.
அதிர்ச்சியை ஏற்படுத்தும் 3-வது கணிப்பு:
முதல் இரண்டு கணிப்புகளும் அப்படியே பலித்துள்ள நிலையில், அவர் கூறியுள்ள மூன்றாவது ஆருடம் அமெரிக்காவுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. “ஈரானுக்கு எதிரான இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிக் படைகள் படுதோல்வியைச் சந்திக்கும்; இது ஒட்டுமொத்த அமெரிக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு (Fall of the Empire) வழிவகுக்கும்” என்பதே அந்தப் பரபரப்பான கணிப்பாகும்.
தற்போது அமெரிக்கா எதிர்கொண்டு வரும் ஏவுகணைப் பற்றாக்குறை மற்றும் பொருளாதாரச் சரிவு ஆகியவை ஜியாங் சூகின் கூறிய அந்த ‘மூன்றாவது ஆருடம்’ பலிப்பதற்கான தொடக்கமா? என்ற விவாதம் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளது.