அமெரிக்க ஏவுகணை இருப்பு குறைகிறதா? ஈரானுடனான போரில் வல்லரசுக்கே சவாலாக மாறும் ஆயுதப் பற்றாக்குறை!
வாஷிங்டன்:
ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் தொடங்கி சில நாட்களிலேயே உலகப் பொருளாதாரம் பெரும் அதிர்வுகளைச் சந்தித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பங்குச்சந்தை வீழ்ச்சி எனப் பல ட்ரில்லியன் டாலர் வர்த்தகம் முடங்கியுள்ள நிலையில், தற்போது அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்பு குறித்த கவலைகளும் எழுந்துள்ளன.
10 நாட்களில் தீரும் அபாயம்?
இந்தப் போர் சுமார் 4 வாரங்கள் வரை நீடிக்கலாம் என அதிபர் ட்ரம்ப் கணித்துள்ளார். ஆனால், ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ மற்றும் ‘சிஎன்என்’ போன்ற சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, இன்னும் 10 நாட்களுக்குப் போர் நீடித்தால் அமெரிக்காவின் ஏவுகணைக் கையிருப்பு அபாயகரமான நிலைக்குச் செல்லும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, தரைவழித் தாக்குதலுக்குப் பயன்படும் ‘டொமாஹாக்’ (Tomahawk) மற்றும் விண்ணிலேயே இலக்குகளை அழிக்கும் ‘SM-3’ ரக ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உக்ரைன் போரும் ஒரு காரணம்:
ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடிக்க ‘பேட்ரியாட்’ (Patriot) மற்றும் ‘தாட்’ (THAAD) போன்ற பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா அதிகளவில் பயன்படுத்தி வருகிறது. ஏற்கனவே உக்ரைன் – ரஷ்யா போருக்காக உக்ரைனுக்கு அதிகப்படியான பேட்ரியாட் ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கியுள்ள நிலையில், தற்போது ஈரானுக்கு எதிராகவும் அவற்றைச் செலவிட வேண்டியுள்ளதால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உற்பத்தி செய்யப்படும் வேகத்தை விட, போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் வேகம் அதிகமாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இஸ்ரேலின் நிலை:
அமெரிக்கா மட்டுமின்றி, இஸ்ரேலின் சொந்தப் பாதுகாப்பு அமைப்புகளான ‘ஆரோ 3’ (Arrow 3) போன்றவற்றின் கையிருப்பும் கணிசமாகக் குறைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா வழங்கிய ‘தாட்’ அமைப்புகளும் ஈரானின் தொடர் தாக்குதல்களைச் சமாளிக்கப் போதுமானதாக இல்லை எனத் தெரிகிறது.
சர்ச்சையும் கேள்விகளும்:
இருப்பினும், இந்தத் தகவல்களைச் சிலர் மறுக்கின்றனர். “பலம் குறைந்த நாடான உக்ரைனே 4 ஆண்டுகளாக ரஷ்யாவைச் சமாளித்து வரும்போது, உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக 10 நாட்கள் கூடத் தாக்குப்பிடிக்காதா?” என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைக்கின்றனர். எது எப்படியோ, அமெரிக்கா தனது ஏவுகணை உற்பத்தியை அதிரடியாக அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக ஸ்டிம்சன் சென்டர் (Stimson Center) போன்ற ஆய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.