அபுதாபியில் சிக்கிய சுற்றுலாப் பயணிகளுக்கு நற்செய்தி: தங்குமிடம் மற்றும் கூடுதல் செலவை ஏற்கும் அரசு!
அபுதாபி: மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, அபுதாபியில் சிக்கித் தவிக்கும் சர்வதேசப் பயணிகளுக்கு ஆகும் கூடுதல் செலவுகளை அபுதாபி அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலா மற்றும் தொழில் நிமித்தமாக அபுதாபி வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அரசின் முக்கிய அறிவிப்புகள்:
- தங்குமிட வசதி: பயணம் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள விருந்தினர்கள், தாங்கள் ஏற்கனவே தங்கியுள்ள ஹோட்டல் அறைகளிலேயே தொடர்ந்து தங்க அபுதாபி சுற்றுலாத்துறை அனுமதி அளித்துள்ளது.
- செலவு ஏற்பு: தங்குவதற்கான கூடுதல் நாட்களுக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் அபுதாபி அரசே ஏற்றுக்கொள்ளும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹோட்டல்களுக்கு உத்தரவு: குறிப்பிட்ட தேதியில் கிளம்ப முடியாத பயணிகளை அறைகளை விட்டு வெளியேற்றக் கூடாது என்றும், அவர்களுக்குத் தேவையான வசதிகளைத் தடையின்றி வழங்க வேண்டும் என்றும் தங்குமிடங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அபுதாபி அரசு எடுத்துள்ள இந்த அதிரடி முடிவிற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.