திருப்பதி: தரிசன வரிசையில் பயங்கர மோதல் – பெல்டால் அடித்துக்கொண்ட பக்தர்கள்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்காகக் காத்திருந்த பக்தர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவரையொருவர் பெல்டால் அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணி முதல் இரவு 8:30 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளதால், இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் நேரடியாக வரிசையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், வரிசையில் நின்றிருந்த இரு குடும்பத்தாருக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது.
ஆத்திரமடைந்த பக்தர்கள் தாங்கள் அணிந்திருந்த பெல்ட்டுகளைக் கழற்றி ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலைக் கண்டு அருகில் இருந்த மற்ற பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தேவஸ்தான பாதுகாப்புப் பணியாளர்கள், இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பொறுமை காக்க வேண்டும்; சக பக்தர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” எனத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வேண்டுகோள் விடுத்துள்ளது.