மத்திய கிழக்கு பதற்றம்: 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி 8 நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். கடந்த 48 மணி நேரத்தில், ஐக்கிய அரபு அமீரக அதிபர், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மற்றும் கத்தார், பஹ்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாகப் பிரதமர் உரையாடினார். இந்த ஆலோசனையின் போது, போர் தீவிரமடைந்து வரும் சூழலில் அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பாக வலியுறுத்தியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து உலக நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருப்பதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது.