திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சுவாமி தரிசனம்!
திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் இன்று காலை தனது குடும்பத்தினருடன் இணைந்து சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று காலை நடைபெற்ற விஐபி (VIP) பிரேக் தரிசனம் வழியாக அவர் ஏழுமலையானை வழிபட்டார். முன்னதாக, திருமலைக்கு வருகை தந்த தலைமை நீதிபதியை, திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்து முறைப்படி வரவேற்று அழைத்துச் சென்றனர்.
தரிசனத்திற்குப் பிறகு, ரங்கநாயகலு மண்டபத்தில் அவருக்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆசி வழங்கினர். அதனைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்குத் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தலைமை நீதிபதியின் வருகையை முன்னிட்டு திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.