இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் மீது பாலியல் தொந்தரவு – ஒருவரை போலீசார் கைது செய்தனர்
இந்தூரில் முகாமிட்டிருந்த ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த இரு வீராங்கனைகள் மீது ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் வரும் 30-ம் தேதி அரையிறுதி ஆட்டத்தில் மோத உள்ளன.
இதற்குமுன், ஆஸ்திரேலிய அணி கடந்த 22-ம் தேதி (புதன்கிழமை) இந்தூரில் இங்கிலாந்து அணியுடன் லீக் ஆட்டத்தில் விளையாடி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த நாள் காலை, அணி வீராங்கனைகள் இருவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து கஜ்ரானா சாலையில் உள்ள கஃபே ஒன்றுக்கு நடந்து சென்றனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவர்களை பின்தொடர்ந்து, பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த வீராங்கனைகள் உடனடியாக அணியின் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
அதன் பேரில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகளின் தகவல்களின் அடிப்படையில் அகீல் கான் என்ற நபரை கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதற்கு பதிலளித்த மாநில அரசு, “புகார் வந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்துள்ளோம்” என்று விளக்கம் அளித்தது.
இதற்கிடையில், பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) இந்த சம்பவத்துக்கு கடும் வருத்தம் தெரிவித்துள்ளது.